தங்கமகன்.அபினவ் பிந்த்ரா (ABHINAV BINDRA)1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் பிறந்த இந்திய திப்பாக்கி சுடும் வீரரான இவர், குறிப்பாக 10 மீட்டர் “ஏர் ரைபிள்” (AIR RIFLE) பிரிவில் கவனம் செலுத்தும் வீரர் ஆவார். பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தனி மனிதப் பிரிவில் முதல் தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்கிற பெருமையைத் தேடித் தந்த இவரது தங்கப் பதக்கம் ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பெரும் தங்கமாகும்.
ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்த இவரது தந்தையார் திரு.A.S பிந்த்ரா ஒரு மருத்துவர் ஆவார், தாயார் பெயர் திருமதி.பப்ளி பிந்த்ரா. அபினவ் பிந்த்ரா தேத்ராடூன் நகரில் “டூன்” பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்று பின்னர் புனித ஸ்டீபன் பள்ளிக்கு, தனது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காகவே மாறினார். அவருடைய முதல் பயிற்சியாளர் லெப்டினன்ட் கர்னல் ஜே.எஸ்.தில்லான் அவர்களால் கண்டறியப்பட்ட இவரது துப்பாக்கி சுடும் திறன் 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இளம் வீரராக இவரை வளர்த்தது. பல்வேறு உலகளாவிய போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்களை இவர் 2001 ஆம் ஆண்டில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் பத்து மீட்டர் “ஏர் ரைபில்” (AIR RIFLE) இணைப் பிரிவில் தங்கமும், தனி மனிதப் பிரிவில் வெள்ளியும் வென்றார், 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இவர் ஒலிம்பிக் சாதனையை முறியடித்தாலும் பதக்கம் வெல்ல இயலாமல் ஏழாவது இடம் பிடித்தார். 2006 ஆம் ஆண்டு மெல்போன் காமன்வெல்த் போட்டிகளில் இணைப் பிரிவில் தங்கமும், தனி மனிதப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 2006 ஆம் ஆண்டில் நடந்த உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
பீஜிங் ஒலிம்பிக் 2008 போட்டிகளில் 10 மீட்டர் “ஏர் ரைபிள்” பிரிவில் 700.5 மொத்தப் புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்ற இவர், தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 596 புள்ளிகளையும், இறுதிச் சுற்றில் 104.5 புள்ளிகளையும் பெற்று புள்ளிகளின் வரிசையில் முதலிடம் பெற்றார். முதல் சுடுதலில் 10.7 புள்ளிகளையும், அடுத்த 9 சுடுதல்களிலும் 10.0 க்கு குறைவான புள்ளிகளையும் பெற்றாலும், கடைசி வாய்ப்பில் அதிகப்படியாக 10.8 புள்ளிகளைப் பெற்று, தன்னுடன் சம புள்ளிகளைப் பெற்றிருந்த ஹென்றி ஹக்கினேன் என்பவரை வெண்கலப் பதக்கத்திற்குத் தள்ளினார்.
2000 ஆம் ஆண்டில் விளையாட்டிற்கான உயரிய விருதான அர்ஜுனா விருதும், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி “கேல் ரத்னா” விருதும் வழங்கி இந்திய அரசு இவரைச் சிறப்பித்தது.
ஒரு முதுநிலை வணிக மேலாண்மைப் பட்டதாரியான இவர், கணிப் பொறி விளையாட்டு மென்பொருள் விற்பனை நிறுவனம் ஒன்றின் முதன்மை இயக்குனராக இருக்கிறார்.
ஒலிம்பிக் தங்கத்தை வென்று இனி வரும் போட்டிகளில் விளையாடும் அனைவருக்கும் ஒரு ஊக்க மருந்தாகவும், இந்திய விடுதலை நாளிற்கான பரிசாகவும் தனது பதக்க வேட்டைக் கனவுகளைத் துவக்கி வைத்த இந்தியாவின் தங்க மகன் அபினவ் பிந்த்ராவை நாம் அனைவரும் வாழ்த்துவோம்…..


நன்றி நண்பரே!!
அருமையான தகவல் தந்த உங்களுக்கு வாழ்த்துகள். அதே நேரம் ஏனிந்த இழிநிலை உலகின் அதிக மக்கள் தொகை நிறைந்த நாடான இந்தியா ஒரு தங்கப் பதக்கத்துக்கே இந்தத் தடுமாற்றமடைவது ஏன்? மனத்துக்குள் உறுத்தும் வேதனையான கேள்வி.
Very Good