சுஷில் குமார் என்கிற இந்திய மல்யுத்த முகத்தை அவர் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போகும் முன்னர் நமக்குத் தெரியாது, பத்தாண்டு கால கடும் உழைப்பின் மூலமும், தனது தன்னம்பிக்கையின் அழியாத வெம்மையும் போல இன்று உலகெங்கும் அறியப்படும் ஒரு இந்திய முகமாக மாறிவிட்ட இந்த இளம் இந்தியர், 66 கிலோ பிரிவு (FREESTYLE) மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை இந்தியாவுக்கு 56 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றெடுத்திருக்கிறார்.25 வயதாகும் இவர் மே திங்கள் 26 ஆம் நாள் 1983 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவர் கசகஸ்த்தான் நாட்டின் லியோனிட் ச்பீரிடோநோவ் (LEONID SPEIRIDONOV) வை வென்று இந்தப் பெருமையை தனது தாய் நாட்டிற்குக் கொடுத்திருக்கிறார்.
ஹெல்சிங்கியில் 1952 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் வெண்கலம் வென்ற கே.டி.ஜாதவ் தான் கடைசியாக மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். ஆண்ட்றீ ஸ்டாட்னிக் என்னும் உக்ரைன் வீரரிடம் முதல் சுற்றில் தோல்வியுற்று பதக்க வாய்ப்பில் பின்தங்கியிருந்த சுஷில் குமார், மறுவாய்ப்பு எனப்படும் (REPECHAGE) சுற்றில் டௌக் ச்குவாப் (DOUG SCHWAB) என்னும் அமெரிக்க வீரரை வென்றார், பின்னர் ஆல்பர்ட் பட்டிரோவ் (ALBERT BATYROV) என்னும் பெலாருசியன் நாட்டு வீரரை வென்று வெண்கலப் பதக்க வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார்.
இன்று (20-08-2008) நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இவர் கசகஸ்த்தான் நாட்டின் லியோனிட் ச்பீரிடோநோவ் (LEONID SPEIRIDONOV) வை 2-1, 0-1, 2-0 என்னும் புள்ளிகள் அடிப்படையில் மூன்று சுற்றுகளில் வென்றார். “சத்பால்” என்னும் “அர்ஜுனா” விருது பெற்ற பயிற்சியாளர் இவரது வெற்றியின் மிக இன்றியமையாத காரணி ஆவார்.


இன்னொரு முகம் .