போரதை முடிக்கப் புறப்படு தமிழா………
வீழ்ந்து கிடக்குது விடுதலை என்றினி
வாழ்ந்து கிடத்தலா முறைமை தமிழா?
மூட்டு நெருப்பாய் எரிகிற வேட்கையை
மீட்டு விதைத்தொரு புலியாய்ப் புறப்படு…….
ஆண்டு கிடந்த எம் இனமே இன்றே
தாண்டு தடைகளை, ஓடி உடைத்தெறி….
வீறு கொண்ட ஒரு தலைவன் வழியினில்
காரிருள் கிழித்தாய், காவியம் படைத்தாய்,
புதுவிசை கொடுக்கத் தமிழே எழுந்து
வருதிசை நோக்கிப் புறப்படு தமிழா…….
மோதி மிதித்திடு மூடரின் முகந்தனில்
பாதியில் முடிகிற கனவா விடுதலை????
புலரும் பொழுதினில் வேலிகள் அறுந்து
புதிதாய் மலரும் ஒருநாள் ஈழம்………
பாரினில் உனக்கா பாதைகள் இல்லை???
போரதை முடிக்கப் புறப்படு தமிழா………
******
நிர்வாணத்தின் வலி……….
அதோ தூரத்தில் தெரிகிற கடலின்
அலைகள் கழுவித் துடைக்கிறது
குருதிக் கறைபடிந்த துயரத்தின் சுவடுகளை……….
காலத்தின் சாட்சியாய் அடர்ந்த
மணற்பரப்பில் வெள்ளைக் கூடாரமிட்டு
மருண்டு சிதறிக் கிடக்கிறது மனிதம்………….
விடுதலை தேடித் படர்ந்த ஒளியின் நிழலில்
இருளைத் திரித்து அரவமற்ற மரங்களின்
மேலிறங்கிச் சருகாய் உதிர்கிறது வாழ்க்கை…………
சன்னமாய்த் துவங்கி வேகமெடுக்கிற மழையின்
துளிகளில் மரணத்தின் வாசனை கலந்து வருவதாக
யாரோ எழுதிய ஈழக்கவிதையின் வரிகளை நான்
வெறித்துப் படிக்கையில் வந்தெனை அடைகிறது…………
இலக்கின்றி விழுந்த வெடிகளின் வேதனையில்
இன்னும் முனகி அழுகிற ஒரு குழந்தையின் குரல்…………….
நிர்வாணத்தின் வலியைச் சுமந்தபடி சுட்டு
வீழ்த்தப்படுகிற சக மனிதனை இணையத்தில்
பார்த்து இடிந்து விழுகிறது எனக்கான இலக்கியங்கள்……………
*****
கொஞ்சம் களத்தில் இருங்களேன்………
முன்னொரு நாளில் நான் இறந்ததை
எண்ணியபடி மண்ணுக்குள் புதைந்திருந்தேன்…….
மௌனத்தை அடைகாத்துக் கல்லறையின்
இருட்டறையில் கடைசியாய் நான் தள்ளப்பட்டேன்……
விறைத்து நிலைகுத்திய என் கண்களில் விடுதலையின்
உயிர்ப்பு இருப்பதாய் என் இறுதி ஊர்வலத்தில் யாரோ
முணு முணுத்து மறைந்தார்கள்…….
கடைசியாய் என்னில் இருந்து வெடித்துக் கிளம்பிய
உயிர் மூச்சு தாழப் பறந்து தேடுகிறது இன்னுமொரு
தேசத்தின் விடுதலை வரலாற்றை………..
தொடர்ந்து வெடிச்சத்தங்களை எதிரொலித்துப்
பிணங்களை வரவேற்றபடி திறந்திருக்கிறது
விடுதலைக்காய் நாங்கள் கட்டிய கல்லறைகள்……..
இன்னுமொரு நாளில் உடைத்து உயிர்த்தெழுந்து
உங்களை நான் சந்திப்பேன் ஈழத்தில்………..
அதுவரை எனக்காய் கொஞ்சம் களத்தில் இருங்களேன்………..
தமிழரின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்.
*********


ohh….supperb….tharam 1….annaa,rompa nalla kavithaikal.ungalidam santhaththudan kavipaadum thiran iruppathaal neengal nalla thaayaga puradsi paadalkal ezhuthalaame!mudinthaal thodarpu kollavum……..thalaivarin padaththudan idappadda kavithai no-1!
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
தமிழனை மட்டுமல்ல தமிழனின் ஆவியைக்கூட புரிந்து கொள்ளும் திறன் கவிஞருக்கு மட்டுமே இருக்கிறது.
ஆயுதங்கள் ஓய்ந்தாலும்..எழுத்தாணிகளும் காகிதங்களும் ஓய்வதில்லை. தமிழர்களின் தாகம்.தமிழீழ தாயகம்.
good work keep on writing more and more