பாசிசத்தின் "பெரியாரும், பாசிசத்தின் கூறுகளும்" என்கிற கட்டுரையை ஏதோ மிகப்பெரிய அறிவுத்தள விவாதத்தில் வைத்து எழுதப்பட்ட கட்டுரை அளவுக்கு பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா என்று பல பேர் இணைப்பெல்லாம் கொடுக்க, மதிப்புக்குரிய ஐயா பேராசிரியர் ராஜன் குறை அவர்கள், விவாதமெல்லாம் நடத்திக் கொண்டிருக்க, கொஞ்சம் அச்சத்தோடு கட்டுரையைப் படிக்கத் துவங்கினால், "செம காமெடி". இப்போது கட்டுரையின் மூலத்துக்குள் செல்வதற்கு முன்னதாக, பெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான ஒரு வாழ்க்கைக் குறிப்பை நினைவில் கொண்டு துவங்குவோம்.
1905 ஆம் ஆண்டு ஈரோடு நகரத்தில் பிளேக் நோய்த்தாக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து தெருக்களில் கிடந்தார்கள், பலர் நோய் வாய்ப்பட்டு மருத்துவ வசதிகள் இல்லாமல் இங்குமங்குமாக அலைந்து திரிந்தார்கள், ஈரோட்டில் உலக அமைதியையும், நோயற்ற வாழ்வையும் தரும் சமஸ்க்ருத மந்திரங்கள் தெரிந்த பார்ப்பனர்கள் பலர் இருந்தார்கள், இந்துக்களின் மடங்களும், புண்ணிய பிரபுக்களும் இருந்தார்கள், கருணை வடிவான கனவான்கள் இருந்தார்கள், ஆனால், இறந்து பிணமாகக் கிடந்த எந்த மனிதனையும் தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குச் செல்வதற்கு அங்கே இவர்களின் கருணையும், கருமாந்திரமும் வரவில்லை. ஒரு மிகப்பெரிய செல்வந்தர் வீட்டு இளைஞனாக இருந்த 26 வயது நிரம்பிய இதே ஈ.வே.ராமசாமி தான் பல பிணங்களைத் தோளிலே தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குச் சென்ற உண்மையான கருணையும், மானுடத்தின் மீதான நேசமும் கொண்டவர். இதுதானே பீ. ஏ. கிருஷ்ணனும் இன்னும் பல சேஷாத்ரிக்களும் சொல்கிற பாசிசத்தின் கூறு.
"ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்" கருத்தை அறியவும் வரவில்லை, ஒரு முட்டையும் போடவில்லை, கிரிப்ஸ்சின் இந்தியப் பயணம் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் நிலைப்பாடுகளை ஆதரிக்கும் ஒரு இந்திய அரசியல் தோற்றத்தை நோக்கியது, தேசியத் தலைவர்கள் பலருடைய கருத்துக்களை ஒருங்கிணைத்து ஆங்கிலக் காலனி ஆட்சியின் மீதான புனித வெளிச்சம் பாய்ச்ச நினைத்த வின்சென்ட் சர்ச்சிலின் கருவியாக இருந்தார் கிரிப்ஸ், உள்நாட்டிலும், உலக அரங்கிலும் இங்கிலாந்துக்கு இருந்த அவப்பெயரை நீக்கிக் கொள்ள வாய்ப்பாக அவர்கள் காந்தி மற்றும் ஜின்னா போன்ற பல தலைவர்களைச் சந்தித்தார்கள், இந்தியாவுக்கு போர் முடிந்தவுடன் "டொமினியன்" தகுதி வழங்கப்படும் என்று உறுதிமொழிகளை வாரி வழங்கினார், ஆனாலும் யாரும் மசிவதாக இல்லை. பிறகு அவரது அந்தப் பயணம் தோல்வியில் முடிந்தது.
இங்கு மிக முக்கியமாக, கிரிப்ஸ்சை பெரியார் சந்தித்த நிகழ்வுக்கும், நீதிக் கட்சியில் எழுந்த அதிகாரச் சண்டைக்கும் ஒரு தொடர்புமில்லை, பெரியார், விஷயம் மிக எளிதானது, பெரியார் அப்போதே தனி நாடு கேட்கிறார், மதராஸ் மாகாணம் இந்திய யூனியனோடு சேர்ந்து இருக்க முடியாது என்று மிகத் தெளிவாகவே சொல்கிறார், மேலும், நீதிக் கட்சியில் உண்டான உள்கட்சி முரண்பாடுகளுக்கும், கிரிப்ஸ் மிசனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது, பிறகு எதற்கு ஆரம்பத்திலேயே இப்படி கிரிப்சை முன்வைத்துக் கிருஷ்ணன் பிதற்றுகிறார் என்று தெரியவில்லை, ஒருவேளை வெள்ளைக்காரன் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு நாம நம்பீருவம்னு ஒரு நம்பிக்கை போல அவருக்கு.
உண்மையில் நீதிக் கட்சிக்குத் தலைவராக வந்த பிறகு பெரியார் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு அதன் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றினார், நீதிக் கட்சியின் பெயரிலேயே இயங்கிய தேர்தல் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒரு குழு பி.டி ராஜன் தலைமையில் 1957 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இயங்கியது.
பீ.ஏ கிருஷ்ணன் இந்தப் பத்தியில் கடைசி வரியில் கட்சித் தொண்டர்களுக்கு இடையே பெரியாருக்கு செல்வாக்கு இருந்தது என்பதை ஏதோ கருணை காட்டுவதைப் போலச் சொல்கிறார். உண்மையில் பெரியார் தனது ஜனநாயகப் பண்புகளால் தான் அப்படி ஒரு மக்கள் திரளை எப்போதும் வைத்திருந்தார், ஒரு அரசியல் இயக்கத்தில் நிகழும் சிக்கல்களையும், உழைக்கும் எளிய மக்களுக்குத் தேவையான அரசியல் ஆற்றல்களையும் பெருக்கிக் கொள்ள பெரியார் பல சிக்கலான தான் விரும்பிய முடிவுகளை எடுத்தார், அவை ஒருபோதும் வேதம் படிக்கிற சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று போன்ற வன்கொடுமையும், மானுட எதிர்ப்பியக்கமுமாக இல்லை. மாறாக, மானுடத்தை நேசிக்கிற ஒரு திறந்த இதயமாகவே இருந்தது.
சேலம் மாநாட்டில் பெரியார் பேசியதை ஏதோ உலக பாசிசத்தின் ஒப்பற்ற உரையைப் போல விளக்குகிற கிருஷ்ணன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை,
"எனக்குத் தோன்றியதைச் செய்தேன், நான் ஒரு தலைவன் ஆகவே நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்" என்று ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் சொல்வதில் என்ன பாசிசத்தின் கூறு கண்டு பிடிச்சீங்க சார். ஒண்ணுமே பிரியல.
பெரியாரை அண்ணா பாசிசவாதி என்று சொன்னாராம், ஒரு மூல இயக்கத்தில் இருந்து பிரியும் உணர்ச்சிப் பூர்வமான சூழலில் ஆட்சி அதிகாரத்தின் மீது நேர்மையான ஆவல் கொண்ட பேரறிஞர் அண்ணா, அப்படிச் சொல்கிறார், ஆனாலும், அதே அண்ணா தான் பெரியாருக்கான நாற்காலி எப்போதும் காலியாக இருக்கும் என்றும் சொன்னார், சம காலச் சூழலில், இயங்கிய இரு தலைவர்களின் முரண்களை பொதுமைப்படுத்தி அண்ணா, பெரியாரைப் பாசிஸ்ட் என்று சொல்லி விட்டார் என்று பிதற்றுவது உறக்கத்தில் ஊளையிடுவதைப் போல ரொம்பவே விகாரமாக இருக்கிறது.
07-06-1943 ஆண்டு திருப்புத்தூர் கூட்டத்தில் பேசுகிற பெரியார் சொல்கிறார்,
"பார்ப்பனனுக்கும் நமக்கும் என்ன தனிப்பட்ட பகை இருக்கிறது, அவர்களை நமது வீட்டு விழாக்களுக்கு அழைத்து, அவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் என்ன குறைந்து விடப் போகிறது? நமது கவலையெல்லாம், அவன் நம்மை மனிதனாகக் கூட மதிக்கத் தவறுகிறானே, அவனை நாம் ஏன் அழைக்க வேண்டும் என்பது தானே" என்று தெளிவாகச் சொல்கிறார்,
இந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல இன்னும் பல மேடைகளில் பெரியார் பார்ப்பனர்களை அவர்களது உடலை வெறுக்கச் சொல்லி அறிவுறுத்தும் மூடத்தனத்தை அறிவுறுத்தவில்லை, மாறாக, பார்ப்பனீயம் என்கிற கோட்பாடு மானுட குலத்துக்கு எப்படி எதிரானது என்கிற ஒற்றைப் புள்ளியிலேயே நிற்கிறார். நீங்களோ மானுடத்தை நேசித்த ஒரு மகத்தான மனிதனை பாசிசவாதி என்று தலைகீழாக நின்று நிறுவப் பார்க்கிறீர்கள், பெரியாரின் வாழ்க்கையும், உரைகளும், இயக்கங்களும், போராட்டங்களும் திறந்த புத்தகம் போன்றவை, உட்கட்சி முரண்பாடுகளை எல்லாம் வைத்து பெரியார் என்கிற கோட்பாட்டு இயக்கத்தின் வரலாற்றுப் பயணத்தை அத்தனை எளிதாக மடக்கி உங்களால் வீழ்த்த இயலாது கிருஷ்ணன்.
மனுவின் மாறுவேடம் ஜனநாயகமாக இருக்கலாம் என்று அவர் அச்சமும், கலக்கமும் கொண்டதில் என்ன தவறு இருக்கிறது? மனு தர்மமே இந்த தேசத்தின் அழுகித் துர்நாற்றம் பிடித்த சாதிய விழுமியங்களை இன்று வரையில் அடை காக்கிற நோய்க்குறி. அதனால் அதன் மீது அவர் கடும் சினம் கொண்டிருந்தார். அவர் ஜனநாயக ஆட்சி என்று குறிப்பிடுவது பார்ப்பனர்களின் ஜனநாயகம் என்கிற பெயரிலான ஒரு குறியீட்டு வெளியை அன்றி உண்மையான மக்கள் போற்றும் ஜனநாயகத்தை அல்ல என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியக்கூடிய செய்தி, ஆனால், கிருஷ்ணன் என்னமாய்ப் பம்முகிறார் இங்கே பாருங்கள், மனுதர்மவாதிகள் இருக்கிற வரை இந்த நாடு ஒழுக்கம், நீதி, நேர்மையைப் பெறவே முடியாது என்று உண்மையை உரக்கச் சொன்னதால் பெரியார் பாசிஸ்ட் ஆகிவிடுகிறாராம்.
நோயைக் கண்டறிந்து சொன்னால் மருத்துவர் குற்றவாளி ஆகிவிடுவாரா கிருஷ்ணன் சார்? செமையா சொதப்பீட்டீங்களே???
பெரியார், பெண்களின் மீதான ஆண்களின் அடக்குமுறைகளையும், ஆதிக்கச் சங்கிலியையும் அறுத்தெறிய “கருப்பை” என்கிற உறுப்பையே வெட்டி எறியுங்கள் என்று முழக்கமிட்ட மாபெரும் புரட்சிக்காரன், கர்ப்பம் என்பதும், குழந்தைப் பேறு என்பதும் பெண்களை எப்படியெல்லாம் வீட்டுக்குள் முடக்கி அவர்களை அடக்கி ஆளப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு சமூக விஞ்ஞானியைப் போல பல ஆண்டுகளுக்கு முன்னதாகச் சொன்ன மானுடத்தின் அற்புதம் பெரியார், அவருடைய மூர்க்கத்தனமான பேசும், எதிர்க்குரலும் ஒரு அடையாளக் குறியீட்டு நோக்கிலேயே அறிஞர்களால் பார்க்கப்படுகிறது மாறாக, உங்களைப் போல சொற்களின் பொருளைத் தேடித் பயணிப்பது ஆய்வு நோக்கில் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனம்.
நெடு நாட்களாகப் பல பார்ப்பனர்களைப் பார்த்து வருகிறேன், சிவகங்கை கோசலராமன் ஐயரில் இருந்து இன்றைய பாரதீய ஜனதாவின் ராகவன் வரைக்கும் ஒரு தீய்ந்து போன பழைய கிராமபோன் ரெக்கார்டைப் போட்டு அரைத்தபடியே இருப்பார்கள், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் சொன்னார், யாரு எப்போ இல்லைன்னு சொன்னது, தமிழ் இலக்கியம் என்கிற பெயரில் நிகழ்ந்து வந்த புராணப் புளுகு மூட்டைகளை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை, அறிவியலும், அரசியலும், சமூகவியலும் நிரம்பிக் கிடக்க வேண்டிய ஒரு மொழியின் இலக்கியத்தில் பக்தியின் பெயரில் இருள் சூழ்ந்து கிடக்கிறது என்று உறைக்கும்படி சொல்ல கடுஞ்சினத்தோடு பல மேடைகளில் அவர் தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பேசினார், ஆனால், பெரியாரைப் போல தமிழை நேசித்தவர் யாரிருக்கிறார் இங்கே?
20-07-1930 ஆம் ஆண்டு கொடைக்கானலில் ஒரு நூலகத்தைத் திறந்து பேசும்போது சொல்கிறார் பெரியார், "
“தமிழில் அறிவியலும், பொது அறிவும் ஏற்படும்படியான ஆதாரங்களே இல்லை, வடமொழி ஆதாரங்களையே மொழி பெயர்த்து பல வேஷங்களுடன் உலவ விட்டிருக்கிறார்கள், மக்களுக்கு அறிவும், சுயமரியாதையும், வேண்டுமானால், உலக இயலை தமிழ் மொழிக்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்".
கிருஷ்ணன்ஜி, இதைவிட மொழியை நேசிக்கிற ஒரு பண்பட்ட தலைவரை நான் இன்னும் சந்திக்கவில்லை, இதைப் போல உங்களுக்கு பல நூறு உரைகளை என்னால் ஆதாரமாகத் தர முடியும், இல்லையென்றால் மெல்ல நடந்து பெரியார் திடல் நூலகத்துக்குப் போய் வாருங்கள், இயலாது என்றால் எனது செலவிலேயே உங்களை எனது இல்லத்துக்கு அழைக்கிறேன், உயர்தரச் சைவ உணவுக்கு நான் பொறுப்பு.
இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெரியார் தமிழை கடும் சினத்தோடு அப்படிச் சொல்லியதைப் போலத்தான் பார்ப்பனீயம் மற்றும் பார்ப்பனர்கள் குறித்த பல்வேறு சினத்தோடு கூடிய கருத்தியலை தனது வாழ்க்கையின் பல்வேறு இடங்களில் முன்வைக்கிறார். ஆனால், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஒரு தலைவனின் வாழ்க்கையும், உரைகளும் அவன் சார்ந்திருக்கிற மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளைத் தந்தது என்பது குறித்துத்தான், மாறாக நீங்களோ, கிள்ளினான், அடித்தான் என்பது மாதிரியான பள்ளி விளையாட்டுக்களை ஆய்வுகளைப் போலப் பரப்ப முயற்சி செய்கிறீர்கள். பெரியாரின், உரைகளையும், அவரது உளவியலையும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நம்மால் ஆய்வுக்கு உட்படுத்த முடியும், ஆனால், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரியாரின் வெறும் சொற்களை மட்டும் கட்டுரைகளுக்குள் திணிக்காதீர்கள், மாறாக, அவர் எந்தச் சூழலில், என்ன காரணத்துக்காக அப்படி ஒரு உரையை நிகழ்த்தினார் என்பதையும் உணர முயற்சி செய்யுங்கள்.
பெரியார் எல்லாவற்றுக்கும் தீர்வு என்றோ, புனித அடையாளம் என்றோ இங்கே யாரும் சொல்லவில்லை, அவரும் கூட ஒருநாளும் அப்படிச் சொன்னதே இல்லை. பெரியாரை நன்றாக விமர்சனம் செய்யுங்கள், விவாதத்துக்கு உட்படுத்துங்கள், அதற்கு முன்பாக அவருடைய வாழ்க்கையை இன்னுமொருமுறை நன்றாக வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள். பெரியார் எல்லாக் காலங்களிலும் மானுடத்தை நேசித்தவர், உங்கள் கோட்பாடுகள் பாசிசத்தின் உண்மையான முகங்களை பக்தியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் மறைத்துக் கொண்டு மானுடத்தின் நாகரீகப் பயணத்தில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த போது, இருளைப் பரப்பும் வேத விளக்குகளை நீங்கள் ஏற்றிக் கொண்டிருந்த போது ஒரு வெளிச்சக் கீற்றாய் இங்கே தோன்றிய அறிவுச் சுடர் அவர். அவர் ஏற்றிய அறிவுச் சுடரில் உங்களைப் போல மானுடத்துக்கு எதிரான பிதற்றல் காரர்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும், அறிவையும் பெற்றுக் கொண்டவர்கள் நாங்கள்.
ஜனநாயகம் என்கிற அடையாளக் குறியீட்டுச் சொல்லை அவர் எதற்காகப் பயன்படுத்துகிறார் என்பதைக் கடைசி வரையில் பீ.ஏ.கிருஷ்ணன் தனது கட்டுரையிலோ, வாழ்க்கையிலோ உணர்ந்தது போலத் தெரியவில்லை, அவர் சொல்கிற ஜனநாயகம் என்பது பார்ப்பனீய நச்சுக்களால் அழுகிப் புரையோடிப் போயிருந்த உழைப்பைச் சுரண்டலை ஊக்குவிக்கிற ஜனநாயகத்தை, சமூக நீதியும், சம வாய்ப்புகளும் வழங்கப்படாத ஒரு தேசத்தில் நிகழும் பித்தலாட்ட ஜனநாயகத்தை திரு. பீ.ஏ கிருஷ்ணன்.
தனது அறிவுத் திறனை ஒரே ஒரு இடத்தில் மட்டும் பீ.ஏ . கிருஷ்ணன் இந்தக் கட்டுரையில் நிறுவி விடுகிறார் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும், பழிவாங்கலின் அவதூறுகள், இழத்தலின் வலி எல்லாவற்றையும் காற்றில் அள்ளி வீசி விட்டுக் கடைசியில் என்ன சொல்கிறார் பாருங்கள்,
"தனிப்பட்ட முறையில் நயத்தக்க நாகரீகத்தைக் கடைபிடித்தவர், வன்முறையை என்றுமே விரும்பாதவர்".
இந்த இரண்டு பண்புகளையும் கொண்ட ஒரு மனிதரை நீங்கள் எப்படி பாசிஸ்ட் என்று சொல்ல முடியும்???, ஆனால், முடியும், அந்த மனிதரின் கோட்பாடுகளால் கடும் இழப்புகளை சந்தித்து, அவர் மீது காழ்ப்போடும், வன்மத்தோடும் ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், நிச்சயமாக முடியும். அது உங்கள் இயல்பான அரசியல், பெரியார் இந்த சமூகத்துக்குச் செய்த மிகப்பெரிய நன்மைகளை நீங்கள் உணர்ந்து கொள்ளும் வரையில் பார்ப்பனராகவும், உணர்ந்த பிறகு மானுட குலத்தின் மகத்தான உறுப்பினராகவும் மாற்றம் பெறுவீர்கள்.
பெரியாரின் மீது நீங்கள் சொல்லும் பாசிசக் கூறுகள் எல்லாம் வெறும் பிதற்றல்கள், உங்கள் மூதாதையர்களின் தோல்வியை வெற்றி கொள்ள நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வு என்பதைத் தவிர என்ன சொல்வது. "The Muddy River" மாதிரி புனைவுகளை தொடர்ந்து நீங்கள் எழுதிக் கொண்டே இருக்கலாம், பெரியாரைக் குறித்து எழுத நீங்கள் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது திரு. பீ. ஏ .கிருஷ்ணன்.
super sir
By: A.n.raj on செப்ரெம்பர் 23, 2015
at 7:32 முப
super sir.
By: A.n.raj on செப்ரெம்பர் 23, 2015
at 7:33 முப
பெரியார் குறித்த, உணர்வெழுச்சியில்லாத, நிதானமான கண்ணோட்டத்துடனான, அவரின் அரசியல் பார்வை மற்றும் அவரது வாழ்வியல் விழுமியங்கள் ஆகியவற்றையும், அவ்வப்போது அவர் தெரிவித்து வந்திருக்கின்ற கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கான சமூக அரசியல் சூழல்களையும் விவாதிக்கும் போக்கு வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது.
இது போன்ற விவாதங்களில் பெரியார், காந்தி என்றில்லாமல் யாரையும் தனிநப்ர் காழ்ப்பில்லாமல் விமர்சிப்பதும், விவாதிப்பதும் தவறானதல்ல. அது மிக ஆரோக்கியமானதும், அவசியமானதும் கூட.
பெரியார் குறித்த ரசிக/பக்த மனநிலைக்கு அப்பாற்பட்ட விவதாங்கள் காலத்தின் கட்டாயம். தனி மனிதனாகக் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகத் தன் பயணத்தைத் துவங்கிய பெரியாருக்கு ஆரம்பகாலங்களில் ஏற்பட்டிருக்காத எதிர்ப்பா இருக்கப்போகிறது? இப்போது கடவுளாக்கப்பட்டுள்ள பெரியாரை விமர்சிக்கும் விமர்சகர்களுக்கும் அதே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆனாலும் காலம் எல்லாவற்றையும் சுலபமாக்கவே செய்கிறது.
By: குருநாதன் on செப்ரெம்பர் 23, 2015
at 12:46 பிப