கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 8, 2015

பூன……..

zoom_149

போன தடவ வந்தப்பவும் ஊருணிக் கரைக்கு வந்து நின்னேன், நடுவுல சில்லுன்னு படிஞ்சு கிடக்கிற வெங்காயத்தாமரயும், நாலஞ்சு தாமரப் பூவும், கரைல நிக்கிற அரசமரக் காத்தும் ஊரணித் தண்ணிய மெல்ல அசைச்சுக்கிட்டு இருந்துச்சு, மதகுக் கல்லுல பாதி அழிஞ்சு போன "தீபா டெக்ஸ்டைல்ஸ்" விளம்பரம், அதுல காலத் தொங்கவிட்டு ரெண்டு பொடிப்பயலுக உக்காந்து மொட்ட வெயில்ல ஏதோ பேசிட்டு இருந்தாங்கே, அவங்கே என்ன பேசிட்டு இருப்பாங்கேன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு, பக்கத்துல போனா அவங்கே ஒலகம் கலஞ்சிரும், தீபாவளிக்கு வாங்கப் போற வெடியப் பத்தியோ, பள்ளிக்கூடத்து வேலில திரியிற சாரப் பாம்பப் பத்தியோ சுவாரசியமா பேசிட்டு இருக்குற பயலுக கிட்டப் போனா மெரண்டு போவாங்கே, எதுத்த கரைல புள்ளையாரு அப்டியே காத்தாட எப்பயும் போலவே உக்காந்திருந்தாரு.

மனசுக்கு ரொம்பவே நெருக்கமான எடம், கிரிக்கெட் விளையாடி முடிஞ்சு முகத்தை கழுவீட்டு அப்டியே கையக் குவிச்சு ரெண்டு மடக்குத் தண்ணி குடிச்சோம்னா பசி பாதி போயிரும், முடி வெட்ட வரும்போது ரெண்டு மூணு பேரு கூட இருந்தா கருப்பையா அண்ணன்கிட்ட சொல்லிட்டு தாமரக் கொட்டை எடுக்குற "தவளக்குஞ்சு" ஐயாவோட கமுத்திப் போட்ட கூடாரப் படக வேடிக்க பாத்துகிட்டே நிக்கிறது ஒரு அலாதியான ஒலகம், அப்பெயெல்லாம் ஒரு நாளைக்கி ரொம்ப நேரம் இருந்துச்சு, லீவுல ஈச்சங்கா புடுங்கித் திங்கப் போறது, மொயல் பாக்கப் போறது, மீன் பிடிக்கப் போறதுன்னு திரிஞ்சு அலஞ்சு வீட்டுக்கு வரும்போது முழுசா ஒரு ராத்திரி மிச்சம் இருக்கும்.

அதே காத்தும் மரமும் தான், ஆனா, மனுசப் பயலுக மனசு மட்டும் மாறிகிட்டே இருக்கு, அப்பயிருந்த கலவையான பாதுகாப்பான உணர்ச்சி இப்ப இல்ல, யாரோ கயித்தக் கட்டி இழுத்துட்டு வந்த மாதிரி இருக்கு, கனமா தொங்கிட்டு இருக்குற அந்த ஆலமரத்து விழுதுல எம்பூட்டு நாள் ஆடி இருப்போம், சிரிப்பும், பாட்டுமா ஒருத்தர ஒருத்தர் முதுகப் புடிச்சுத் தள்ளி விட்டபடி புழுதி படிஞ்ச காலோட அப்ப இருந்த மனசுக்கு இப்ப வயசாயிருச்சு.

அன்னைக்கி நான் பூனயப் பாத்தேன், முழங்காலுக்கு மேலே மடிச்சுக் கட்டின அழுக்கு வேட்டியோட கை ரெண்டுலயும் செவப்புக் கலர் பிளாஸ்டிக் கொடத்தத் தூக்கிட்டு மேலே ஏறிட்டு இருந்தான், அவனிருக்குற பக்கமா மெதுவா நடந்து போயி அவனுக்கு எதுத்த மாதிரி நின்னேன், பக்கத்துல கடந்து போறப்ப லேசா சிரிச்சேன், அவனும் என்னைய பாத்து ஏதோ செஞ்சான், அது சிரிப்பா, இல்ல வேற எதாச்சும் உணர்ச்சியான்னு எனக்குத் தெரியல, ஆனா, பூனயோட கண்ணப் பாக்குறப்ப எல்லாம் எதாச்சும் ஒரு அழிஞ்சு போன மனுஷனோட நெனப்பு மனசுல தடக்குன்னு வந்துட்டுப் போகும்.

அந்த நெனப்பு இன்னிக்கும் வந்துச்சு. பூனயப் பத்தி ஒங்களுக்கு சொல்லணும், பூன எப்போ இங்க வந்தான்?, அவன யாரு கூட்டிட்டு வந்தாங்க? அவனோட ஊரு எது? அவனுக்கு அப்பா அம்மா குடும்பம் எல்லாம் இருக்கான்னு? யாருக்கும் தெரியாது. , தங்கராசையாவுக்கும், சைக்கிள் கட வாசையாவுக்கும் ஒரு வேல தெரிஞ்சிருக்கும், ஆனா, அவங்க ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்க.

கண்காணாத இடத்துல இருந்துகிட்டு பால்ய வயசுல இருந்து பழகின தெரிஞ்ச மனுஷங்களோட சாவுக்குப் போகாம அந்த எழவு வீட்டையும், சடங்குகளையும் யோசிக்கிறது பெரிய வலி, தங்கராசையா செத்தன்னிக்கி எங்கேயோ வடக்குப் பக்கத்துல இருக்குற போபால் நகரத்துல இருந்தேன், "தங்கராசையா செத்துப் போயிட்டாருப்பான்னு" அம்மா சொன்னப்ப கெதக்குன்னு நெஞ்சுக்குள்ள என்னவோ பண்ணுச்சு, ஒன்னும் சொல்லல, என்னத்தச் சொல்றது, காலத்துக்கெல்லாம் பதில் சொல்லிட்டுத் திரிய ஆரம்பிச்சா கத நடக்காது.

தங்கராசையாவோட சாவோட பூனயப் பத்தின ரகசியங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு தான் தோணுது, பூனய எனக்கு ஒரு எட்டு வயசுல இருந்து தெரியும், வாட்டசாட்டமா இருப்பான், ரொம்ப நீளமான காலுங்க அவனுக்கு, அவனப் பாத்தா ரோமானியப் படைங்க போருக்குப் போனப்ப வுட்டுட்டுப் போன ஆளு மாதிரி இருப்பான், அவனோட கண்ணு ஒருமாதிரி பழுப்பு நெறத்துல, பூனைங்களுக்கு இருக்குற மாதிரி இருக்கும், பெரும்பாலும் அவன் சட்டை போடுறது இல்ல, பாத்த நாளைல இருந்து இன்னிக்கு வரைக்கும் பிளாஸ்டிக் கொடத்துல தண்ணியத் தூக்கிட்டு போற அவனோட பிம்பம் இந்த ஊருக்கு ஒரு அடையாளம் மாதிரி, அவன் அப்படித் தண்ணி தூக்காத நாளே இல்லைன்னு நெனைக்கிறேன்.

எப்பயாச்சும் சின்னப் பயலுக பூன கூட வம்பிளுப்பாணுக, அவன் மேலே கல்லத் தூக்கி எரியுறது, ஒளிஞ்சிக்கிறது, அப்புறமா அவனோட வேட்டிய அவுத்து விட முயற்சி பண்றதுன்னு எதாச்சும் சின்னப்புள்ளத் தனமா பண்ணுவானுக, பொறுமை இழந்தா ஒருமாறி அடிக்குரல்ல கத்திகிட்டு அவனுகளத் தொரத்திக் கொஞ்ச தூரம் ஓடுவான் பூன, அது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும்தான், போஸ்ட் ஆபீஸ் கேட்டுகிட்ட வந்தா நின்னுக்கிடுவான், பயலுக தைரியமா தப்பிச்சு ஓடிருவாங்கே, அவனோட மூக்கு கழுகுக்கு இருக்குற மாதிரி முனைல வளைஞ்சு கூர்மையாயிருக்கும், வெத்தலக் கரை படிஞ்ச பல்லுங்க, பாதி தொறந்த மாதிரியே இருக்குற வாய்ன்னு பூன ஒரு விசித்திரமான மனுஷன்.

அவனோட ஒலகமே தங்கராசையா கடத் தாவாரமும், இந்த ஊரணியும், அப்பறமா போஸ்ட் ஆபீஸ் கேட் வரைக்கும் உள்ள ரோடும் தான், அவன் அதைத் தாண்டிப் போனதே இல்ல, ஒருநா பட்டையா கோயில் திருவிழா நடந்தப்ப "வள்ளிதிருமணம்" நாடகத்தப் பாத்துகிட்டே ஓலப்பாயில தங்கராசையா மகனுக்குப் பக்கத்துல படுத்துட்டிருந்த பூனய நான் வினோதமாப் பாத்தேன். கடையத் தாண்டி ரொம்பத் தொலைல பூனயப் பாத்தது அப்பத்தான். பூனயின் உலகத்தில் சில காய்கறிகள், ஒரு அருவாமனை, ஊரணிக்கும் கடைக்கும் அவன் தண்ணீர் சுமந்து செல்கிற அவனது காலடித்தடங்களால் உண்டான ஒரு ஒத்தையடிப்பாதை, தங்கராசையா, கசங்கிய சிவப்பு நிறத்தான குத்தாலத் துண்டு ஒன்று என்று வெகு அரிதான பொருட்களும் மனிதர்களுமே இருந்தார்கள்.

9034916524ea2598baab81

பூனக்கி வாய் பேச வராது, அடிக்குரல்ல எப்பயாச்சும் கத்துறதும், வாய்க்குளேயே மொனகுறதும் தான் பூனயோட குரல், பூனயோட நசிஞ்ச மர்மமான குரல்ல அவனோட பேரு ஒளிஞ்சிட்டு இருக்கணும், யாராச்சும் பூனக்கி பேரு வச்சிருப்பாங்க, அவனும் ஒருநாள் அம்மா கூடயோ அப்பா கூடயோ எங்கேயாச்சும் போயிருப்பான், அவனோட அம்மாவும் நம்மள எல்லாம் கூப்பிடுற மாதிரி எதாச்சும் செல்லப் பேரு வச்சு அவனக் கூப்பிட்டிருப்பாங்க, ஆனா, அந்தக் கதையெல்லாம் பூனயோட மனசுக்குள்ள ஒரு அழிஞ்சு போன அரண்மனை மாதிரி இருக்கும்னு தோணிச்சு எனக்கு.

தங்கராசையா கடைக்கிப் பின்னாடி இருக்குற தாவாரத்துக்கு மேலே தட்டி போட்டு மூடி இருக்குற கூரைக்குக் கீழ எலக்கட்டு, அப்புறமா காய்கறி எல்லாம் குமிஞ்சு கிடக்கும், ராத்திரி பதினோரு மணிக்கு மேலே குத்தாலத் துண்டு விரிச்சு பூன படுத்து தூங்கிருவான், காலைல எப்படியும் பூனை ஒரு அஞ்சு மணிக்காச்சும் எந்திரிச்சு ஆகணும்னு நினைக்கிறேன். பூனையோட தண்ணிக் கொடம், வெத்தலக் கறை வுட்டு அவனப் பத்தி சொல்லனும்னா ரெண்டு விஷயம் தான் ஞாவுகம் இருக்கு, மொத விஷயம் பூன அழுதது.

ஒருநாள் நல்ல உச்சி வெயில்ல பூனய ரெண்டு தளக்காவூர்க்காரப் பயலுக அடிச்சுகிட்டு இருந்தாங்கே, குடிபோதைல இருந்தாங்கே போல, நல்ல குண்டா தடியன் மாதிரி இருந்த ஒரு பய "செய்ய மாட்டியோ, ஊமப் பயலேன்னு, ஊமப் பயலே"ன்னு சொல்லிகிட்டே பூனயக் கன்னத்துல அடிச்சான், "வாயில்லாத ஜீவன ஏண்டா இப்டிப் போட்டு அடிக்கிறீங்க"ன்னு கல்லாவுல இருந்து இறங்கி தங்கராசையா வரதுக்குள்ள பூனையா ஆச தீர அடிச்சு முடிசிட்டாங்கே பயலுக.

பூனகிட்ட அந்தத் தடியன் வெளில கெடக்குற அவனோட செருப்ப எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கான், பூன பதில் எதுவும் சொல்லாம அப்படியே நிக்கவும், ரெண்டு மூணு வாட்டி சொல்லிப் பாத்துட்டு தடியன் அடிக்க ஆரம்பிச்சுருக்கான். அன்னைக்கிப் பூன ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்தான், யாரையாச்சும் நினச்சு அழுதுருப்பான்ல பூன, அம்மாவையோ, அப்பாவையோ, ஒருவேள கல்யாணம் ஆகியிருந்தா பொண்டாட்டியையோ, புள்ளையையோ, அந்த நேரத்துல அவன் மனசுல யாராச்சும் கண்டிப்பா இருந்திருப்பாங்க.

ஆனா, யாருக்கும் தெரியாத அந்த நெனெப்ப என்னன்னு சொல்ல, நம்மல்லாம் அழுகுறப்ப யாரையாச்சும் நினைச்சுகிட்டு அழுகுறம்ல அதே மாதிரத் தானே பூனயும் அழுதுருப்பான், அந்த அழுகைல ஏதோ ஒரு இனம்புரியாத மனுஷப் பயலுக வாழ்க்கையோட சோகமெல்லாம் சேந்து தண்ணியா வடிஞ்ச மாதிரி இருந்துச்சு, கோவம் கோவமா வந்துச்சு, தங்கராசையா பூனயக் கைத்தாங்கலா தாவாரத்துக்குக் கூட்டிப் போயிப் படுக்க வச்சாரு.

ரெண்டாவதா பூன சிரிச்ச கதை, இன்னைக்கி வரைக்கும் அவன் ஏன் அப்படிச் சிரித்தான் என்று புரியவே இல்ல, அன்னைக்கி வழக்கத்துக்கு மாறா ஊரணிக் கரைல ரொம்பக் கூட்டமா இருந்துச்சு, செங்க லாரி டிரைவர்ல இருந்து போஸ்ட் மாஸ்ட்டர், ஜான் சாரு, அப்பறம் நர்சம்மா எல்லாரும் ஊரணிக் கரைல நின்னுகிட்டு இருந்தாங்க, ஐயரு கவலையோட "நேத்துச் சாயங்காலம் "சங்கடஹரசதுர்த்தி" நல்லாக் குளிப்பாட்டி அலங்காரமெல்லாம் பண்ணி பூஜை புஷ்பம் வச்சுட்டுத்தான் போனேன், காத்தால இப்படி ஆயிடுத்தே"ன்னு கவலையோட பொலம்பிக்கிட்டு இருந்தாரு, போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிரலாம்னு சில பேரும், யாரோ வெளியூர்ப் பயலுக தான் வினாயகரப் திருடிப் பிரதிஷ்டை பண்ணும்னு தூக்கிட்டுப் போயிருக்காங்கே, பூனயும் அங்க வந்து நின்னு ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துட்டே இருந்தான்.

அப்பறம் பஞ்சாயத்துத் தலைவர் வந்து ஒடனே வைரவபுரத்துல போயி வலம்புரிப் புள்ளையார வாங்கிட்டு வரச் சொல்லிப் பயலுக கிட்டக் காசு குடுத்து அனுப்புனாரு, அப்பையெல்லாம் சும்மா தான் இருந்தான் பூன. சாயங்காலம் ஒரு ஆறு மணி இருக்கும், நாங்கல்லாம் பள்ளிக்கூடம் விட்டு வந்து காணாமப் போன புள்ளையாரப் பத்தி ரொம்பக் கவலையோட பேசிட்டிருந்தோம், கொஞ்ச நேரத்துல எஸ்.எம்.ஆர் அண்ணன் 407 ல புள்ளையாரக் கொண்டு வந்து சேத்தாங்கே பயலுக, புள்ளையார இறக்கி ஊரணிக் கரை மேலே அரசமரத்தடில இருக்குற கோயில் திண்டுக்கு கொண்டு போயி உக்கார வச்சப்ப, ஐயரு பயலுகலப் பாத்துச் சொன்னாரு, "வினாயகனப் படுக்க வைங்கோ", பயலுகளும் புள்ளையாரப் படுக்க வச்சாங்கே, புள்ளையாரு மல்லாக்கப் படுத்து வானத்துல தெக்கால பறந்து வேட்டங்குடிக்குப் போற வெளிநாட்டுப் பறவைகளைப் பாத்துகிட்டு இருந்தாரு.

field-watercolor-painting

அப்பப் பாத்துப் பூன கூட்டத்த வெளக்கி உள்ள வந்தான் பாத்துக்கோங்க, வழக்கமா பூவும் பொட்டுமா அமர்க்களமா உக்காந்திருக்குற புள்ளையார துணிமணி எதுவுமில்லாம கீழ படுக்க வச்சிருக்கிற கோலத்தைப் பாத்ததும் பூனக்கி சிரிப்பு வந்துச்சா, இல்ல, என்னன்னே தெரியல, பூன குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சான், அவனால சிரிப்ப அடக்கவே முடியல, புள்ளையாருக்கு துணி மணியெல்லாம் சுத்தி உக்கார வச்சு பிரதிஷ்டை பண்ணி முடிக்கிற வரைக்கும் பூன சிரிச்சுகிட்டே இருந்தான்.

ஐயரும், தங்கராசையாவும் பூனய மானாங்கன்னியா வஞ்சு "ஏண்டா ஊமப் பயலே, திமுரா ஒனக்கு"ன்னு தொரத்தி விட்ட பின்னாடியும் தண்ணிக் கொடத்தத் தூக்கிகிட்டு போகும் போதும் வரும் போதும் புள்ளையாரப் பாத்து சிரிச்சுகிட்டே இருந்தான் பூன. ஒருநாளப் போல மணியண்ணன் கிட்டப் பேசிட்டு வக்கப் போறப்ப "அட, தம்பி, பூன செத்துட்டாம்பான்னு ரொம்பச் சாதாரணமா சொல்லிட்டு வச்சுட்டாரு, அதுக்கப்பறமா இன்னைக்கித்தான் ஊருக்கு வந்திருக்கேன், ஊரணிக் கரைல வந்து நின்னப்ப பூன கொடத்தத் தூக்கிட்டுத் தண்ணி எடுக்க நடந்து நடந்து நல்ல வெள்ளைக் கலர்ல அந்தப் பாதை அப்டியே கெடந்துச்சு, ஊரணியையும் கடையோட கொல்லைப்புறத்தையும் இணைக்கிற ஒரு நேர்கோடு மாதிரி அந்தப் பாதை எப்பவும் வானம் பார்த்தபடி, செங்கக் காலவாய் புகைக்கி நடுவுல மனச ஏதோ பண்ணுச்சு, பூனங்கிற ஒரு மனுஷனோட வாழ்க்கையைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச இந்த ரெண்டு கதையும் விட்டு வேறே எதுவுமே தெரிஞ்சிக்க முடியாமப் போச்சேன்னு கவலையா இருந்துச்சு.

பூன, அம்மா அப்பா கூட எடுத்துகிட்ட ஒரு போட்டா எங்கயாச்சும் ஒரு இரும்புப் பொட்டிலையோ, காகிதங்களுக்கு நடுவுலையோ இருக்கும், பூனையோட பேர யாராச்சும் எங்கயாச்சும் எழுதி வச்சிருப்பாங்க, பூனயோட வாழ்க்கைல அவனுக்கு நண்பர்கள் யாராச்சும் இருந்திருப்பாங்கல்ல, பூனக்கி ஒரு ஊரும், வீடும் கொஞ்சம் சொந்தக்காரங்களும் இப்பவும் எங்கயாச்சும் இருக்கும் தானே?

 

****************


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: