கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 20, 2011

“முற்றத்து மரங்கள்” – ஒரு முன்னோட்டம்

mutrathu marangal

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு “முற்றத்து மரங்கள்” என்னும் தலைப்பில் நூலாக வெளியாகிறது, தகிதா பதிப்பகம் பதிப்பு வேலைகளையும், ஓவியர் அனந்த பத்மநாபன் அட்டைப்படங்களையும் வடிவமைக்க தம்பிகள் வேல்முருகன் (சிங்கப்பூர்), அருள் ராமலிங்கம் (ஜப்பான்) மற்றும் அண்ணன் துரை நந்தன் (கனடா)ஆகியோர் இந்த நூல் வெளியாவதற்கு உளப்பூர்வமான தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

படைப்பிலக்கியம் அல்லது புனைவுகள் முற்றிலும் கற்பனையில் எழுதப்பட இயலாது என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு, எந்த ஒரு எழுத்தாளனும் அல்லது படைப்பிலக்கியவாதியும் தன்னைச் சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டே தனது எழுத்தின் மூலத்தைக் கண்டறிகிறான், இலக்கியங்களில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான நிகழ்வுகள் பதிவு செய்யும் மனிதனின் பதின் வயதில் நிகழ்ந்தவையாய் இருக்கின்றன, பதின் வயதில் உள்ளீடு செய்யப்படும் வாழ்வியல் தொகுப்புகள் எஞ்சிய நாட்களில் மிகுந்த தாக்கத்தை விளைவிக்கின்றன.

இந்தத் தொகுப்பும் அதற்கு விதி விலக்கல்ல, இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பான்மையான நிகழ்வுகள் அதிகாலைப் பனி மூடிய நினைவு மரங்களைப் போல காலத்தைக் கடந்து எழுத்தாய் நிலை பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதிய பிறகு நான் ஒரு இலக்கியவாதி என்று சொல்லத் துவங்கினால் அது ஒரு மூடனின் பிதற்றலாய் இருக்கும், இதில் இடம்பெறும் நிகழ்வுகளும், புனைவுகளும் மொழியை அல்லது இலக்கியத்தைக் கற்றுக் கொள்வதற்குத் துடிப்புடன் இயங்கும் ஒரு சிறு குழந்தையின் காலடித் தடங்களைப் போன்றவை. ஆனால், எல்லா இலக்கியங்களும் ஒரு குழந்தையின் காலடித் தடங்களில் இருந்தே துவங்கி இருக்கும் என்பதில் முரண்கள் இருக்க முடியாது.

இந்தச் சிறுகதைகளின் மூலத்தையும், அவை சொல்ல வரும் செய்திகளையும் ஒரு படைப்பாளனின் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

312554_293881737307602_100000573330162_1116528_847433190_n

சிறுகதை 1

சிறுவயதில் இருந்தே வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், வரலாற்று நினைவிடங்களைப் பார்வையிடுவதிலும் அளப்பரிய ஆர்வம் எனக்குள் இருந்து வந்திருக்கிறது, நிகழ்காலத்தின் அவலங்கள் வரலாற்றின் நிழலில் சிறிது நேரமேனும் இளைப்பாறிக் கொண்டு விடுகிறது, போரும், கொலைவெறியும் நிரம்பிக் கிடக்கிற வரலாற்றின் பக்கங்களில் மனிதர்களின் சில மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்ய சில மாவீரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உதவி இருக்கிறார்கள், அந்த வகையில் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுக்க வந்த போது நிகழ்ந்த சில உண்மைகளின் மீது புனையப்பட்ட சிறுகதை.

சிறுகதை 2

தொலைந்து போன சின்னஞ்சிறு பொருட்கள், நினைவுகள், மனிதர்கள் இவை எல்லாம் நமக்குள் விளைவிக்கும் தாக்கம் மகத்தானது, எல்லா மனிதர்களின் நினைவுச் செல்களிலும் இடைவிடாது ஒரு முள்ளைப் போல உறுத்திக் கொண்டிருக்கும் சில மறக்க முடியாத சிறு பொருட்கள் இருக்கக் கூடும், எனக்குள் தொலையாமல் எனது நிலப்பரப்பில் மட்டுமே தொலைந்து போன ஒரு டிக்கி டிக்கி, காளியம்மைப் பாட்டி, அம்மாவின் வகுப்புத் தோழி இவர்களின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை ஏறத்தாழ ஒரு உண்மைக்கதையே, கதையை அழகு செய்வதற்காகச் சில புனைவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறுகதை 3

முதலாளிகளின் வணிகமும், அதன் தாக்கமும் வயல்களையும் மரங்களையும் அழித்தபடி பயணிக்க, ஊரகப் பகுதிகளில் அமைதியாக வாழும் உழைக்கும் எளிய மக்களை அன்றாடம் தனக்குள் விழுங்கி ஏப்பம் விடுகிறது நகரத்தின் கட்டிடங்கள், எல்லா மனிதர்களையும் போலவே இவ்வுலகில் பொருளைத் தேடித் பயணிக்கும் ஒரு முதியவரின் வாழ்க்கை நகரத்தின் பாதுகாவலர்களால் துரத்தப்படுவதை இந்தக் கதை அதன் போக்கில் சொல்கிறது, ஐந்து பெண்களைப் பெற்ற ஒரு எளிய தந்தையின் இருப்புக்கான தடைகள், பொருள் தேடலுக்கான இடர்கள் இவைகளைக் குறித்துப் பேசும் இந்தக் கதையின் பின்னே எனக்கு மிக நெருக்கமான ஒரு உறவு இருக்கிறது.

சிறுகதை 4

பிச்சைக்காரர்கள் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிற சில மனிதர்களின் பின்னே இருக்கும் ரகசியங்களை, அவர்களுக்குள் புதைந்து கிடக்கிற மனித வாழ்க்கையின் சுவடுகளை கால்களில் வலுவிழந்த ஒரு முதியவரின் மூலமாகச் சொல்ல முற்படுகிறது இந்தக் கதை, ஏறத்தாழ இது எனது வாழ்க்கையின் இளம்பருவத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைக் கதையே, தந்தையின் மிதிவண்டியில் அமர்ந்தபடி பயணித்த உன்னதமான சில கணங்களை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு குறைந்த அளவில் என்னுடைய வரலாற்றிலாவது பதிவு செய்யப்பட வேண்டிய கதை என்பதால் இந்தக் கதை உருப்பெற்றது, புனைவின் அலங்காரம் இருந்தாலும் எனக்கு மிக நெருக்கமான ஒரு கதை இது.

268228_2201007941426_1134136782_2701446_1985912_a

சிறுகதை 5

உடல் நீள அகலங்களை வைத்து மனிதர்களை அளவிடும் நமது பொதுப் புத்தியின் இயலாமையை சுட்டும் கதை, மனதின் நீளமும் அகலமும் எல்லா மனிதர்களின் அளவீடுகளோடு பொருந்திப் போவதை நமக்கு உணர்த்துகிறான் ஒரு மனிதன். சில நேரங்களில் மனிதர்களை விடவும், மனித எண்ணங்களை விடவும் விலங்குகளின் கலப்படமற்ற அன்பு நம்மை நிலைகுலைய வைக்கிறது, தங்களுக்கான நீள அகலங்களுக்கு ஏற்ப மனதைச் சுருக்கிக் கொள்ளும் வலி மிகக் கொடுமையானது மட்டுமில்லை தவிர்க்கப்பட வேண்டியதும் கூட என்கிற சமூக நெறி இதற்குள் பொதிந்து கிடக்கிறது.

சிறுகதை 6

எனது முதல் சிறுகதை, ஒற்றையடிப் பாதைகளின் வழியாகப் பயணிக்கத் துடிக்கும் ஒரு சிறுவன் இன்னும் எனக்குள் ஒளிந்து கிடப்பதை அடையாளம் கொண்டு சொன்ன கதை, மலைகள் குறித்த வியப்பு மனிதனுக்குள் அடங்காமல் கிடப்பதை நினைவூட்டி பழைய பண்பாட்டு விழாக்கள் மற்றும் ஒன்று கூடல்களின் தொலைக்க முடியாத நினைவுகளை அள்ளித் தெளிக்கும் கதை, சில உண்மை நிகழ்வுகளோடு புனைவும், இயற்கையும் மட்டுமன்றிக் கொஞ்சம் கத்துக் குட்டியின் நடையும் கலந்திருக்கும். அப்பத்தா, முற்றத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள், பலூன்களை வைத்து நெற்றியில் உடைத்து விளையாடும் பருவம் எல்லாம் பொதுவாய் இருக்க சாதியின் பிளவுகள் மலைக்குன்றுகளை உடைக்கும் வலிமையோடு அலைவதை வேடிக்கை பார்க்கும் இயலாமை என்று தொடரும் கதை.

சிறுகதை 7

நவீனத் தொழில் நுட்பங்களும், கருவிகளும் மனிதனை இவ்வுலகை ஆளப் பிறந்தவனாக மமதை கொள்ள வைக்கும் காலகட்டத்தில் இயற்கை அவனது மிதமிஞ்சிய ஆளுகையை சில நேரங்களில் முறித்துப் போடுகிறது, அவனும் மற்ற விலங்குகளைப் போலவே இவ்வுலகின் தகவமைப்பைப் பகிர்ந்து கொள்ளப் பிறந்தவன் தான் என்பதை அவனுக்கு உணர்த்துகிறது, சுனாமியின் இருபது அடி உயர அலைகள் மனிதனின் எல்லாத் தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் அடித்து வீழ்த்தி சமநீதியைப் போதிக்கிறது. ஒரு பயணத்தில் மேலும் கீழுமாய் உயரும் உயிர் அச்சம் சில மாறுபட்ட மனித உணர்வுகளை எதிரொலிக்கிறது. சுனாமி சீறித் தீர்த்த நாளில் ஒரு விமானியின் வலைப்பதிவை மையமாக வைத்து எழுதப்பட்டது, ஏறத்தாழ என்னுடைய வாழ்க்கையோடு எந்த நெருங்கிய தொடர்பும் இன்றிப் புனைவாகவே எழுதப்பட்டது.

சிறுகதை 8

பயன்பாட்டில் இருந்து அருகிப் போன சில பொருட்களை மீண்டும் காணும்போது அவை பயன்பாட்டில் இருந்தபோது இயங்கிய கணங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் விளைந்த நெல்லைக் கொட்டி வைத்திருந்த பரண்கள் இப்போது தேவையற்ற பொருட்களை அடைந்து வைக்கும் வைப்பு அறையாகி விட்டன, ஆனாலும் அவற்றுக்குள் இன்னும் ஈரமாய் சொட்டிக் கொண்டிருக்கும் காலத்தின் போக்கை கொஞ்சமாய் இந்தக் கதை சொல்ல நினைக்கிறது, இந்தப் பரண்களில் நமது மொழியின் மிகப் பழைய சொல்லடைகளும் ஓசைகளின்றி உறங்குவது தான் இப்படியான ஒரு பரணுக்குள் என்னை ஏற்றிப் பார்த்தது. நினைவுப் பரணில் ஏற்றி விடப்பட்டிருக்கும் காலக் குழந்தையின் மெல்லிய காலடித் தடங்களை அங்கு படிந்திருக்கும் நிகழ் காலத் தூசியால் மறைக்க முடிவதில்லை.

Vel

சிறுகதை 9

ஒரு பேருந்துப் பயணத்தின் போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் தாயையும் கவனிக்க நேர்ந்த போது கருக்கொண்ட கதை, தாய்மையின் உன்னதமான பொழுதுகளைப் படம் பிடித்த ஒரு அற்புதமான உணர்வு, குழந்தைகளை எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கும் மனநிலை ஒரு தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பதை உரக்கச் சொல்லும் கதை, ஊனமுற்ற சமூகம் உன்னதமான சில குழந்தைகளை எப்படிப் பார்க்கிறது அல்லது விலக்கி வைக்கிறது என்கிற மிக மெல்லிய உணர்வை ஒரு ஆணின் பார்வையில் படம் பிடிக்கும் கதை, பனிக்கட்டியால் செய்யப்பட கத்தியின் கூர் முனைகளைக் கொண்டு இதயத்தின் ஆழம் வரை ஊடுருவி பேரண்டத்தின் புரியாத சிக்கல்களை நமக்குள் செலுத்தி விட்டுத் தடங்கள் இன்றி வெளியேறும் குளிர் நீரைப் போல இலக்கியத்தின் மூலமாய் வலிகளைப் பகிரும் சிறுகதை.

சிறுகதை 10

காதல் ஒரு நிலவின் பல்வேறு பரிமாணங்களைப் போல இவ்வுலகின் அசைக்க முடியாத ஆற்றலாய் நிலை கொண்டிருக்கிறது, கல்லூரிக் காலம் முடிந்து பொருளை மும்பை மாநகரின் பெரிய வீதிகளில் தேடி அலைந்த போது சந்தித்த எண்ணற்ற மனிதர்களில் சங்கீதாவும் ஒருத்தி, பெண்மையின் பல்வேறு கூறுகளை மிக எளிமையாக விளக்கிப் பெண்மையே இவ்வுலகை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்கிற மிகப்பெரிய செய்தியை எளிமையாய் அதிகச் சொற்கள் இன்றி விளக்கிச் சொன்னவள் சங்கீதா, எனது வாழ்வனுபவங்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய கதைதான் என்றாலும் உலகின் பொதுவான கதை போலத் தோற்றம் கொள்கிறது, மறுவாசிப்புச் செய்யும் போது.

5460_1179080284409_1450211022_479362_3479554_n

சிறுகதை 11

உலகின் ஒவ்வொரு தாயும், தந்தையும் தனது குழந்தைகளின் மேம்பாட்டை நோக்கிக் கனவு காண்கிறார்கள், தனது குழந்தைகள் இவ்வுலகில் அதிகச் சிரமங்கள் இன்றியும், மகிழ்ச்சியோடும் காணப்படும் நிலையில் அவர்களின் உணர்வுகள் அமைதி அடைகின்றன, தங்கள் வாழ்க்கையின் நோக்கம் நிறைவு பெற்றதாக அவர்கள் அப்போது ஒரு நீண்ட பெருமூச்சில் ஓய்வு கொள்கிறார்கள், குறிப்பாக இந்திய சமூகத்தில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஆங்காங்கே நெருடும் இடைவெளிகளை நிரப்ப முயலும் ஒரு சிறு முயற்சி.

சிறுகதை 12

சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்குக் காரணமான சிறுகதை, ஒரு மரத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் மிக மெல்லிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதை, இதன் பாத்திரங்கள் எல்லாம் நமக்குள் ஒளிந்து கிடக்கும் மென்மையான உணர்வுகளே, ஆதிக் குடிகளின் மனதில் இன்னும் படிந்திருக்கும் இயற்கையோடு ஒன்றிக் கிடக்கிற வாசம் மொழியின் வழியாய்ச் சிதறி வழிந்த போது சிறுகதையாய் வடிவம் பெற்றது. தனது மண்ணும், மக்களும் மனிதர்களின் உயிரெல்லாம் நிறைந்து கிடப்பதை ஒரு மெல்லிய நீரோடை போலச் சொல்ல முற்பட்ட சிறுகதை.

**********

 

 

 

 

 

 


மறுவினைகள்

  1. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  2. arivu.congrats for your short story book publication. tell me how to get it here.

    • where will ur short story book be released


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்